என்  முதல் பிறப்பு  என் பெற்றோர்  மூலம்.  என்  இரண்டாவது  பிறப்பு  உங்கள் மூலம்.......
                      கனவில் வந்த காந்திக்கு  பதில் சொல்லவேண்டும்  என்று  நிலவன் அண்ணா சொன்னபோது  , எனக்கு  கேள்விக் கேட்க மட்டுந்தான்  தெரியும் என்று சொன்னேன்.  ஆனாலும்  என்னிடம்  ஒப்படைக்கும்  பணியை மிகச்சரியாக செய்துவிட  வேண்டும்  என்பதுதான்  என் இயல்பு. அந்த வகையில்  நாளை  பதில் எழுதிவிடுகிறேன்   என்று  அண்ணாவிடம் சொல்லிவிட்டேன்.
                      
                                அலுவலகத்தில்  தற்போது  25% இடஒதுக்கீட்டிற்கு  பணம் பெறுவதற்கான படிவங்கள்  சரிபார்க்கும் மிகப்பெரிய பணி.   நிறைய  பள்ளிகளைப்  பார்க்கலாம்,ஆசிரியர்களையும்,  மாணவர்களையும்  சந்தித்துக்  கொண்டாடலாம்  என்று  இந்த பதவிக்கு வந்த எனக்கு படிவங்களோடும்  புள்ளிவிபரங்களோடும்........மகிழ்வான மனநிலை இல்லை.  
                   அண்ணாவிடமிருந்து  இன்று  பதிலை  எதிர்பார்க்கிறேன்  என்ற செய்தி  வந்தவுடன்  இரவு பத்து மணிக்குமேல்  உட்கார்ந்து  கேள்விகளைப் படித்தேன்.  படிக்கும்போதே  ஒவ்வொரு கேள்விக்கும்  என்மனதில்  பதில் ஓடும்.அதுதான் இறுதியானது.  (  புடவை எடுக்கும்போதும்  இப்புடிதான்.  முதலில்  பார்த்த புடவைதான்  தேர்வு செய்யப்படும்.  ஆனாலும்  இருபது புடவையாவது  பார்ப்பேன்....ரசனையுள்ளவள்!  )  இருந்தாலும்  மற்றவர்கள்  எப்படி  பதிலளித்திருக்கிறார்கள்  என்று பார்த்தேன்.  ...
         கரந்தை சார், ஜம்புலிங்கம் சார், நிலவன்  அண்ணா  இவர்கள் பதிலைப் படித்ததும் .....அய்யய்யோ.....நமக்கு  இப்புடியெல்லா  பதில்  எழுதத்தெரியாதே....( ஒரு கேள்விக்குமட்டும்  அண்ணாவுடன்  ஒத்துப்போனேன் )  ரொம்ப  கவலைப்பட்டேன்.  எப்படியும்  என் மகள்  மைதிலி  மட்டுமாவது  படிப்பாள்  என்று தான்  பதில்  எழுதினேன்.
         காலையில்  பயந்துபோய்  வலைப்பக்கம் வந்த எனக்கு  ...அடடா ....நமக்குத்தானா  இவ்வளவும் !கில்லர்ஜி சகோ,  தமிழ் இளங்கோ சார்,கரந்தை சார்,முனைவர் ஜம்புலிங்கம் சார்,திண்டுக்கல் தனபாலன்  சார்,  என் மகள் மைதிலி...........எப்புடி இப்புடி எல்லாரும் ?  சத்தியமா  கால்கள்  தரையில்  இல்லவேயில்லை.  மிகச்சிறந்த  இலக்கியவாதிகளைக் கொண்ட  இந்த வலைப்பக்கத்தில்  என்  யதார்த்தமான  பதில்கள்  எடுபடாது என்று நினைத்த  எனக்கு  ,நீங்கள் அனைவருமே நல்ல ரசனையாளர்கள்  .............நன்றிகள்
      நிலவன்  அண்ணாவிற்கு  நன்றி  சொல்ல  அழைத்தபோது  ,அவரது  வலைப்பக்கத்தைப்  பார்க்கச்சொன்னார்.  போய்ப்பார்த்தால்......அடடா...எனக்கென்று தனியாக ஒரு பதிவு.நான் விரும்பிய செடிக்கொடிப்பூ  படத்துடன். கூடவே  எனக்கு மிகுந்த  அங்கீகாரமும்.  எல்லோரும்  பார்க்கவும், படிக்கவும்  வேண்டும் என்பதற்காக  நீங்கள்  எடுத்துக்கொண்ட  முயற்சி....நன்றி அண்ணா .இது  என்   இரண்டாவது பிறப்பு !
          நான்  ஊக்கப்படுத்த  வேண்டிய  படிப்பாளி,  படைப்பாளியாக  மாறவேண்டும்,  மற்றவர்கள்  அறிய  வேண்டும்...ஏன் இப்படி  ஒரு ஆசை அண்ணாவுக்கு ?  யோசிக்கிறேன்....ஆசை  என்று  நீங்கள்  சொன்னதால்  நான்  மூன்றாவது  பிறப்புக்கும்  தயாராகிறேன்.  (மூன்று பிறப்பு  இருக்கலாம்.பிறப்பு  என்பது  வளர்ச்சிதானே!)  அது  என்னை  நானே  பிரசவித்துக்  கொள்வதாக இருக்க வேண்டும். அதற்கு  நிறைய சிந்திக்கணும்,ஆழ்ந்து  உள்வாங்கணும். முக்கியமா  பொறுத்திருக்கணும்.   
                               
                  வைரமுத்து, இறையன்பு, எஸ்.ராமகிருஸ்ணன்,  சுப வீரபாண்டியன், மனுஸ்யபுத்திரன்   இப்புடி  இவர்களையே  படிப்பதால்  இவர்களோடே  இருந்துவிடுகிறேன்  அண்ணா.  இருக்கத்தான்  வேண்டும்!  ஆனால்  ஜெயாவாக  வெளியே வர வேண்டுமல்லவா?  இப்போதைக்கு  இயலாது. தொடர்ந்து  என்னை செதுக்க வேண்டுகிறேன்.  உளமார்ந்த  நன்றிகள்  நிலவன்  அண்ணாவிற்கு.